வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

குழந்தை விதவைகள்



கேர்ணல் ஆர் ஹரிஹரன்

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் வங்காளத்தில் ராணுவப் பணியில் ஈடுபட்டிருந்தேன். நாங்கள் தங்கியருந்த இடம் கிராமப் புறத்தில் இருந்தது. ஒவ்வொரு மாலையும் சூரியன் மறையும் நேரத்தில் கோவில்  மணிகள் கேட்கும். ஆனால் அதற்கு முன்னால் கோவிலில் இருந்து பெண்கள் அழும் ஓலம் கேட்கும். ஒரு நாள் நான் அங்கு போய் பார்த்த போது, வெள்ளைச் சேலை கட்டிக் கொண்டு இரண்டு மூன்று இளம் பெண்கள் ஓலமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு வங்காளி பெண்மணியை அவர்கள் அழுவதின் காரணத்தைக் கேட்டேன். ‘தம்பி, அவர்கள் சிறு வயதில் திருமணம் செய்து கொண்டு விதவையானவர்கள். அவர்கள் விதவையான பிறகு பாடக்கூடாது, ஆடக்கூடாது, கோவிலைத் தவிற வேறு எங்கும் போகக்கூடாது என பல கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் அவர்கள் கோவிலுக்குப் போகவோ அழுவதற்கோ எந்தத் தடையும் இல்லை. ஆகவே அவர்கள் அதைச் செய்வதைத் தவிற தங்களுக்கு வேறு வழியில்லை என நம்புகிறார்கள். ஆனால் அது மிகப் பெரிய தவறு. நானே சிறு வயதில் விதவையானேன். ஆனால் தற்போது ஒரு ராணுவ ஆபீசரை மறுமணம் செய்து கொண்டேன். நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது என்று சொன்னார்.

இலங்கைத் தமிழர்கள் நிலையை கோவிலில் ஓலமிட்ட குழந்தை விதவைகளுக்கு ஒப்பிடலாம். அவர்கள் நிலை குலைந்து நிற்கிறார்ள். தொடர்ந்து அரசியல் மற்றும் ஆயுதவாதிகளின் பேச்சைக் கேட்டு பேரழிவு அடைந்த அவர்களுக்கு எவர் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை கிடையாது. தங்கள் மீதும் நம்பிக்கை இல்லை முப்பது ஆண்டுகளாக வன்முறைக் கலாச் சாரத்துக்கு உடன் பட்டு தலையாட்டி பொம்மைகளானவர்கள் அவர்களை உசுப்பிவிட தங்கள் கலாசாரம் அழிந்துவிட்டது என்று சிலர் ஓலமிடு- கிறார்ள். ஆனால் அதை ஒப்புக் கொள்ள அவர்கள் மனம் மறுக்கிறது; அதன் காரணம் தற்போது வாழ வழியில்லை என்பதே ஆகும்.

அவர்களுக்கு வேறு வழியில்லையா?   

எனக்கு சென்ற ஐம்பது ஆண்டுகளாக இலங்கையுடன் தொடர்பும் பரிச்சயமும் உண்டு. ஆகவே நான் என் இலையுதிர் காலத்தில் இலங்கைத் தமிழர்களைப் பார்க்கும் போது முன்பு தெளிவாகாத பல கூறுகள் ஓரளவு தெரிகின்றன.

முதலாவது, பெரும்பான்மை மக்களுக்கு அதிகமான நனமை அளிப்பவை எது என்று தமிழர்களே நிச்சயிக்க வேண்டும். அதை மற்றவர்கள் நிச்சயிக்கக் கூடாது. அத்தகைய நிலையை அடைவது எளிதல்ல.போர்க் -கலாசாரம் வளர்ந்து தழைத்து மக்களிடையே வன்முறைக்கு அடிபணியும் மன நிலை ஓங்கியுள்ளது. தமிழர்கள் துன்பங்களுக்கு போர்க் கலாசாரம் ஒரு முக்கிய காரணி. ஒரு ராணுவத்தான் இவ்வாறு கூறுவது உங்களுக்கு சிரிப்பைத் தரலாம் ஆனால் பல போர்களைச் சந்தித்த அனுபவத்திலிருந்து நான் கற்ற பாடம் இது. உலக ராணுவங்கள் அழிக்கப் பிறந்தவை. அவர் வெற்றியை கணிப்பவை அவர்கள் எவ்வளவு எதிரிகளைக் கொன்றார்கள் எவ்வளவு பொருட்களை நசிப்பித்தார்கள் என்பவற்றைப் பொறுத்தது.

அப்படி இருந்தும் வன்முறையை அடக்க மனித கலாசாரம் ராணுவங்களை உருவாக்கி, அவற்றுக்கு ஒரு உயர்ந்த இடத்தை சமூகத்தில் அளித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அந்த போர்க் கலாசாரம் இலங்கைத் தமிழர்களுக்கு தேவையற்றது. அதைத் தவிர்த்து வேறு சூட்சுமங்களை தமிழர்கள் யோசிக்க வேண்டும்.

இரண்டாவது, நான்கில் ஒரு ஈழத் தமிழர் தன் உடமைகளையும் உறவினரையும் பறிகொடுத்து நிற்கிறார்கள். அவர்கள் அடிப்படைத் தேவைகளுக்கு உலகெங்கும் நிதியும் பொருளும் சேகரித்து உதவ முயற்சி எடுக்க வேண்டும். இதைப் பெரும் அளவில் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. இதற்கு சமீபத்தில் கிரிக்கெட் வீரர் மஹிள ஜயவர்த்தன எடுத்த முயற்சி ஒரு எடுத்துக்காட்டு. ஏன் இத்தகைய முயற்சிகளைத் தமிழ் அரசியல் வாதிகள் (இலங்கையிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி) எடுக்கவில்லை என்பது எனக்கு புரியாத புதிர்.   

மூன்றாவது, தமிழர்களிடைய ஒரு கலாசாரச் சீறழிவு ஏற்பட்டுள்ளது. இது அன்னியர்களால் ஏற்பட்டதல்ல. அதற்கு அவர்கள் துதிபாடும் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களே காரணமாகும். கட்சி வேறுபாடு இல்லாமல் பொதுவாக எல்லோருக்குமே இதில் பங்கு உண்டு. முக்கியமாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று பறைசாற்றிக் கொண்டவர்கள், தற்போது உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளார்கள். ஆகவெ அவர்கள் வார்த்தை ஜாலங்களில் மயங்காதீர்கள். அவர்கள் தங்களைப் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொண்டு சாதி வாத நெருப்பை மூட்டிக் குளிர் காய்பவர்கள். சாமியில்லை பூதமில்லை என்று கூறிக்கொண்டு தங்களுக்கே சிலை வைத்து பூசை போடச் சொல்லுபவர்கள். உங்கள் தேவைகள் அவர்கள் சுய தேவைகளுக்கு அப்பாற்பட்டவை. ஆகவே அவர்கள் உறுதி மொழிகளை நம்பி அவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்புக்களை அதிகமாக்காதீர்கள். இவ்வாறு பலமுறை நீங்கள் ஏமாந்திருக்கிறீர்கள். உங்கள் சொந்தத் திறமைகளை நம்புங்கள், வளருங்கள்.

கடைசியாக, இவையெல்லாம் சாத்தியமா என்று யோசிக்காதீர்கள். அவற்றை சாதிக்க என்ன வழி என்று ஆய்வு செய்யுங்கள். எனக்கு வரும் பெரும்பாலான இ-மெயில்கள் மற்றவர் – இந்தியா, தமிழ் நாடு, அமெரிக்கா, சீனா, மற்ற இனத்தவர், மற்ற சாதியினர்கள் – தமிழர்களுக்குச் செய்த குற்றங்களையே பேசுகின்றன. மற்ற எல்லோரையும் சீர்திருத்த ஒரு ஜன்மம் போதுமா? அதைவிடச் சுலபமானது நாம் நம்மிடம் உள்ள குறைகளைத் திருத்துவதே. இந்த தீர்க்கமான மன நிலை வர நீங்கள் மற்றவர்களைக் குறை சொல்லுவதை நிறுத்துங்கள். நீ மற்றவனை சுட்டிக் காட்டும் போது உன் மூன்று விரல்கள் உன்னையே சுட்டிக் காட்டுகின்றன என்ற ஒரு பழைய ஆங்கில பழமொழி நினைவுக்கு வருகிறது. உண்மைதான். முதலில் நீங்கள் உங்கள் குறைகளைக் கண்டறிந்தால். உங்கள் பிரச்சினைகளில் பாதி வலு இழந்துவிடும்.

இவற்றை நான் அதிகம் எடுத்துச் சொல்வதில்லை. ஓரிரு முறை சொன்ன போது, நீங்கள் ஆரியர், திராவிட நாகரீகத்தை அழித்தவர் என்று கேட்பவர்கள் சிலர் சாடியதுதான் மிச்சம். இன்னும் எவ்வளவு காலம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று மேற்கோள் காட்டிவிட்டு மற்ற சாதிக்காரர்களையும், நாட்டுக்காரர்களையும் சாடுவீர்கள்? இவை அனைத்தும் பயனற்ற வாதங்கள். நாம் யதார்த்த வாதிகளாக மாற வேண்டும். எல்லாவற்றையும் இழந்து நிற்கும் மக்களுக்கு உதவ வேண்டும் அதுவே முதல் வேலை. முதலில் அது முடியட்டும்.  

சுருங்கச் சொன்னால் நாம் குழந்தை விதவைகள் மனப்பான்மையிலிருந்து மீள வேண்டும். ஆக்கப் பூர்வமான செயல்களில் ஈடுபடவேண்டும்.

நன்றி; தூது,  15 ஆகஸ்டு, 2011 - இலங்கையில் புதிதாகப் பிரசுரமாகும் பத்திரிகை
 

வியாழன், 5 மே, 2011

ஒசாமாவின் மறைவும் இந்தியாவும்


கர்னல் ஆர் ஹரிஹரன்

அல்-கயிதா பயங்கரவாதத்தின் தந்தையாகக் கருதப்படும் ஒசாமா பின் லாடன் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள ஆபடாபாத் என்ற ஊரில் கடந்த 4-ந் தேதி அமெரிக்க உளவியல் துறையும் சிறப்புப் பிரிவுப் படையினரும் சேர்ந்து நடத்திய தாக்குதலில் கொல்லப் பட்டார். இது அமெரிக்கா 2001-ம் ஆண்டு இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்துத் துவக்கிய உலகளாவிய போரின் ஒரு திருப்பு முனையாகும்.
ஒசாமாவின் அல்-கயிதா தற்கொலைப் படையினர் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 
11-ந் தேதி அமெரிக்காவில் பல இலக்குகளைத் தாக்கி 3000-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்த பின் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஒசாமாவையும் அல்-கயிதாவையும் அழிக்கும் ஒரே குறிக்கோளுடன் ஆப்கனிஸ்தானில் போர் தொடுத்தார். ஏறக்குறைய பத்தாண்டுகளாகத் தொடரும் அப்போருக்கு ஒசாமாவின் அழிவு ஒரு மகத்தான வெற்றி என்றே கூற வேண்டும்.

தற்போது தெற்காசியாவையும் இந்தியாவையும் பொறுத்தவரை ஒசாமாவின் மறைவு மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளது. தெற்காசியாவில் அல்-கயிதா தீவிரவாதிகளின் போர் திறன் ஒசாமா மறைவால் குறையுமா? நலிந்து வரும் பாகிஸ்தான்-அமெரிக்க உறவில் என்ன தாக்கம் ஏற்படக்கூடும்? ஒசாமாவின் மறைவால் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் பாதிக்கப் படுமா?

ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஒபாமா ஆப்கானிஸ்தானிலிருந்து யு.எஸ் ராணுவத்தின் வலிமையை படிப்படியாகக் குறைப்பதில் முனைந்துள்ளார். அந்த முயற்சியை ஒசாமாவின் மறைவு ஓரளவு ஊக்குவிக்கும் என்பது நிச்சயம். ஒசாமா ஆபடாபாத்தில் வெளி உலகத் தொடர்பின்றி வசித்து வந்தார் என்று தெரியவந்துள்ளது. இது அவர் தினசரி போர் முனை விளைவுகளில் தொடர்ந்து ஈடுபடவில்லை என்பதைக் காட்டுகிறது. அவரது உடல் நலக் குறைவு இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறினாலும் அவர் அமெரிக்க ஏவுகணைகளின் தாக்குதல்களில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே தலை மறைவாய் இருந்தார் என்பது என் கணிப்பு.

ஓசாமாவின் நேரடித் தலைமை இல்லாத போதும் அல்-கயிதா தீவிரவாதிகள் ஆப்கனிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வலிமையுடன் தொடர்ந்து இயங்கி வருவதற்கு முக்கிய காரணம் இளைய தலைமுறைத் தலைவர்களே ஆகும். ஒசாமாவின் மறைவின் தாக்கத்தை சமாளிக்கும் திறன் அவர்களுக்கு இருக்கலாம்; ஆகவே போரின் கடுமை குறையாமல் தொடரலாம். ஆனால் ஒசாமா உலக அளவில் பல்வேறு இஸ்லாமிய தீவரவாத இயக்கங்களுக்கு வழிகாட்டியாக இருந்தார். ஆகவே அவர் மறைவின் பின் இஸ்லாமிய தீவர வாத இயக்கம் உலக அளவில் சிதற வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.

ஆப்கனிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேரும் நாள் நெருங்க அல்-கயிதாவுக்கு அரசியல் ரீதியில் முழு ஆதரவு அளிக்கும் சமய அடிப்படை இயக்கமான தாலிபான் மீண்டும் அரசைக் கைப்பற்றும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஆகவே தாலிபான் இயக்கம் ஒசாமா மறைவால் அல்-காயிதா சிதறாமல் இருக்கு முழு முயற்சி எடுக்கும். இருந்தாலும் ஆப்கனிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் உள்ள தீவரவாத மற்றும் சமய அடிப்படை இயக்கங்கள் ஓரளவு குழம்பிய நிலையிலே இருக்கும் என்று தோன்றுகிறது. அப்படி இருந்தாலும் உடனடியாக ஓசாமாவின் மறைவைப் பழிவாங்கத் தீவரவாதத் தாக்குதல்கள் தொடுக்கப் படலாம் என்பதே அமெரிக்க, மற்றும் இந்தியாவின் கணிப்பாகும்.

கடந்த ஜனவரி மாதம் ரேமண்ட் டேவிஸ் என்ற அமெரிக்க உளவுத்துறை அதிகாரி கொலைக் குற்றங்களுக்காக பாகிஸ்தானில் கைது செய்யப் பட்டார். அவரை விடுதலை செய்ய அமெரிக்கா எடுத்த முயற்சிகளின் விளைவாக ஏற்கனவே அமெரிக்க-பாகிஸ்தான் உறவு விரசல் கண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னால் இரு நாடுகளின் உளவுப் பிரிவுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்த பாக் ராணுவ உளவுத்துறைக் கட்டமைப்பு(ISI) தலைவரான ஜெனரல் ஷூஜா பாஷா அமெரிக்க மத்திய உளவு அமைப்பான CIA –வின் தலைவரைச் சந்திக்க அமெரிக்கா சென்றார். ஆனால் அப்போது ஏற்பட்ட அடிப்படைக் கருத்து வேறுபாடுகளால் பேச்சு வார்த்தைகளைத் தொடராமல் பாஷா திடீரென்று நாடு திரும்பினார். அந்த நிகழ்ச்சி பாக்-அமெரிக்க உறவுகளின் அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டியது.

ஒசாமாவை எதிர்த்து அமெரிக்கா ஏற்கனவே இரண்டு முறை நடத்திய தாக்குதல்கள் தோல்வியில் முடிந்தன. அந்த இரண்டு முறையும் ஒசாமாவின் மறைவிடத்தைப் பற்றிய தகவலை அமெரிக்கர்கள் பாக் ராணுவத்துடன் பகிர்ந்து கொண்டனர். பிறகு அமெரிக்கர் பாக் ராணுவத்துடன் சேர்ந்து தோல்வியில் முடிந்த கூட்டுத் தாக்குதல்களை நடத்தினர். அமெரிக்க ஆய்வாளர் கணிப்பில் ஓசாமா இரண்டு தாக்குதல்களிலிருந்தும் தப்பியதற்கு முக்கிய காரணம் பாக் ராணுவம் அல்-கயிதாவுடன் வைத்திருந்த தொடர்பாகும். இம்- முறை ஒசாமா மறைந்திருந்த இட விவரம் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதமே அமெரிக்க உளவுத்துறைக்கு தெரியவந்தாலும் அந்த விவரத்தை அமெரிக்கா பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. அமெரிக்காவின் மூன்றாவது தாக்குதல் வெற்றியடைந்ததற்கு இது ஒரு முக்கிய காரணமாய் இருக்கலாம்.

அல்-கயிதா மற்றும் லஷ்கர் ஏ-தய்யப்பா போன்ற தீவிர வாத இயக்கங்கள் பாக் ராணுவத்தின் செல்லப் பிள்ளைகள் என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்த அமைப்புகள் பாக் உளவுத்துறையுடன் வைத்துள்ள உறவு மும்பியில் 2008-ம் ஆண்டு நடந்த லஷ்கர் தாக்குதலின் விளைவாகத் தொடர்ந்த ஆய்வுகளில் தெளிவாகியுள்ளது. பாக் ராணுவத்தின் முக்கிய கேந்திரமான ஆபடாபாத்தில் பாக் ராணுவத்திற்குத் தெரியாமல் ஒசாமா மீது வெற்றிகரமாக அமெரிக்கர்கள் நடத்திய தாக்குதல் பாக் ராணுவத்திற்கு ஒரு மானப் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இது பாக் ராணுவத்தில் ஊடுருவியுள்ள தீவிரவாத நேசர்களைக் கட்டாயம் எரிச்சல் மூட்டும் சம்பவம் என்றே கருதலாம். ஆகவே அமெரிக்கத் தாக்குதலின் பின் விளவைகளை எப்படி பாக் ராணுவம் எதிர் கொள்கிறது என்பதைப் பொருத்தே பாக்-அமெரிக்க உறவுகள் வரும் மாதங்களில் கணிக்கப்படும்.

பாகிஸ்தானின் வெளிநாட்டு உறவுகளை நிச்சயிப்பதில் ராணுவத்துக்கு முக்கிய பங்கு உண்டு. ஆகவே அமெரிக்கத் தலைமை எப்போதுமே பாக் ராணுவத்துடன் தனிப்பட்ட உறவை வளர்ப்பதில் கவனமாக உள்ளது. அந்த உறவை வளர்க்க அமெரிக்கா பெருமளவிலான ஆயுத தளவாடங்களையும் போர் விமானங்களையும் பாக் ராணுவத்திற்கு உதவியாக அளித்து வருகிறது. பாக் ராணுவம் எப்போதுமே இந்தியாவைத் தன் ஒரே எதிரியாகக் கருதி வருவதால் அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் அதற்குத் தேவைப் படுகின்றன. அதுபோல ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்க ராணுவம் வெற்றிகரமாக செயல் படவும், எதிர்காலத்திலும் அந்தப் பகுதியில் தனது செல்வாக்கை நீடிக்கவும் அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் ஒத்துழைப்பு தேவைப் படுகிறது. ஆகவே உட்பூசல்கள் இருந்தாலும் இரு நாடுகளும் தற்போதைய ஊடல் உறவை தொடர்ந்து நீடிப்பார்கள் என்று நினைக்கிறேன்

ஒசாமா மறைவினால் இந்தியாவை அச்சுருத்தும் பாக் தீவிரவாத இயக்கங்களில் அதிகம் பாதிப்பு ஏற்டாது. அவை பாக் ராணுவ, மற்றும் சில அரசியல் கட்சிகளின் துணையுடன் செயல் படுகின்றன. ஒசாமா ஆபடாபாதில் வசதியுடன் வாழ்ந்து வந்தது இந்தியா பாகிஸ்தானுடன் நடத்திவரும் பேச்சு வார்த்தைகளில் பாகிஸ்தானின் மீதான நம்பிக்கையைக் கட்டாயம் குலைக்கும். உலக அளவில் இந்தியா நெடுங்காலமாக பாகிஸ்தானே இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களின் தாயகமாகச் செயல்பட்டு வருகிறது என்று சொல்லி வருகிறது. அந்த வாதம் பாகிஸ்தானில் கண்டறியப்பட்ட ஒசாமாவின் புகலிடத்தால் ஓரளவு வலுப்பெற்றிருக்கிறது. இருந்தாலும் பாக் ராணுவ ஒப்புதல் இல்லாமல் இந்தியாவைப் பொருத்தவரை பாகிஸ்தான் அரசு எந்த புதிய முயற்சியும் மேற் கொள்ள முடியாது. அவற்றில் பாகிஸ்தானிலிருந்து இயங்கும் இந்திய எதிர்ப்புத் தீவிரவாத இயக்கங்களைக் கட்டுப் படுத்தும் முயற்சியும் அடங்கும். ஆகவே இந்தியா பாக் தீவிர வாதிகளின் தாக்குதலுக்குத் தொடர்ந்து தயாராகவே இருக்க வேண்டும். நமது உள்நாட்டு மந்திரி திரு சிதம்பரமும் இதையே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.